SaraNextGen.Com

Chapter 2.6 - Tirukkural - Chapter 2 Term 1 6th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

Detailed Solutions Of Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 2.6 திருக்குறள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.

மக்களுக்கு மகிழ்ச்சி தருவது ………
அ) ஊக்கமின்மை
ஆ) அறிவுடைய மக்கள்
இ) வன்சொல்
ஈ) சிறிய செயல்
Answer:
ஆ அறிவுடைய மக்கள்

Question 2.
ஒருவர்க்குச் சிறந்த அணி ..
அ) மாலை
ஆ) காதணி
இ) இன்சொல்
ஈ) வன்சொல்
Answer:
இ) இன்சொல்

பொருத்தமான சொற்களைக் கொண்டு நிரப்புக

Question 1.
இனிய …………….. இன்னாத கூறல்
கனியிருப்பக் ……………… கவர்ந் தற்று.
Answer:
உளவாக, காய்க்

Question 2.
அன்பிலார் …………….. தமக்குரியர் அன்புடையார்
………………. உரியர் பிறர்க்கு .
Answer:
எல்லாம், என்பும்

நயம் அறிக

Question 1.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
இந்தக் குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
மோனை சொற்கள் :
செயற்கரிய செய்வார்
செயற்கரிய செய்கலா

எதுகை சொற்கள் :
செயற்கரிய செய்வார்
செயற்கரிய செய்கலா
இந்தக் குறளில் அடி மோனை, அடி எதுகை சொற்கள் வந்துள்ளது.

பின்வரும் செய்திக்குப் பொருத்தமான திருக்குறள் எது எனக் கண்டறிந்து எழுதுக

2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர். “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி பி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
அ) செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்

ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

இ) இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.

விடை: ஆ) ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.

குறுவினாக்கள்

Question 1.
உயிருள்ள உடல் எது?
Answer:
அன்பு இருப்பது தான் உயிருள்ள உடல், அன்பு இல்லாதவர்களின் உடல் வெறும் எலும்பும் தோலும்தான் என வள்ளுவர் கூறுகிறார்.

Question 2.
எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமைவது எது?
Answer:
அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கமாக அமையும் என வள்ளுவர் கூறுகிறார். அன்பிலார்,

Question 3.
அன்புடையார் செயல்கள் யாவை?
Answer:
அன்பிலார் : அன்பு இல்லாதவர்கள் உலகில் உள்ள எல்லா பொருள்களும் தனக்கே சொந்தம் எனக் கூறுவார்கள்.
அன்புடையார் : அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே சொந்தமென கூறுவார்கள்.

மொழியை ஆள்வோம்

கேட்டும் கண்டும் அறிந்தும் மகிழ்க.

Question 1.
இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
இயற்கை சார்ந்த பாடல்கள், கதைகள், உரைகளை மாணவர்கள் தாங்களாகவே கேட்டு அறிந்துகொள்ளுதல் வேண்டும்.

Question 2.
பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றிய காணொலிக் காட்சிகளைக் கண்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் பறவைகள், விலங்குகளின் வாழ்க்கை முறை பற்றி காணொலிக் காட்சிகளை தாங்களாகவே கண்டு அறிந்து கொள்ள வேண்டும்.

கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக

இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம். பனிபடர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த்தவழ்ந்து வரும் வெண்ணிலா இவையெல்லாம் இயற்கை நமக்குத் தந்த பரிசு.

இயற்கையின் அழகைக் கண்டு இன்புற்றால் மட்டும் பேர்தாது. அந்த அழகை நாம் பாதுகாக்க வேண்டும். நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள், விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Question 1.
எதனை இயற்கை என்கிறோம்?
Answer:
இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள், அவற்றின் இயக்கம், அவை இயங்கும் இடம், இயங்கும் காலம் அனைத்தும் ஒன்றிணைந்ததே இயற்கை என்கிறோம்.

Question 2.
இப்பத்தியில் உள்ள இயற்கையை வருணிக்கும் சொற்கள் யாவை?
Answer:
பனி படர்ந்த நீலமலைகள், பாடித்திரியும் பறவைகள், தன்னிச்சையாகச் சுற்றித்திரியும் விலங்குகள், சலசலக்கும் ஓடைகள், ஆர்ப்பரித்து வீழும் அருவிகள், நீந்தும் மீன்கள், அலைவீசும் அழகிய கடல், கண்சிமிட்டும் விண்மீன்கள், தங்க ஓடமாய்த் தவழ்ந்து வரும் வெண்ணிலா போன்றவை இயற்கையை வருணிக்கும் சொற்கள் ஆகும்.

Question 3.
இயற்கையை ஏன் பாதுகாக்க வேண்டும்?
Answer:
நாம் தமது தேவைக்காக மலைகள், காடுகள் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றை அழித்து வருகிறோம். மேலும் நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசுபடுத்தி வருகிறோம். அதனால் இயற்கைச் சமநிலை மாறி புவி வெப்பமயமாகிறது. புவி வெப்பமடையாமல் காப்பது நமது கடமை. இயற்கையைப் பாதுகாத்தால் நாம் நம்மையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Question 4.
பத்திக்குப் பொருத்தமான தலைப்புத் தருக.
Answer:
இயற்கை வளம்.

ஆசிரியர் கூறக்கேட்டு எழுதுக

1. மாமழை
2. வான் சிறப்பு
3. முரல் மீன்
4. வலசை போதல்
5. பறவை இனங்கள்
6 சார்பு எழுத்துகள்
7. சாண்டியாகோ
8. தோற்கடிக்க முடியாது
9. காணிநிலம்

கீழ்க்காணும் தலைப்பில் கட்டுரை எழுதுக

இயற்கையைக் காப்போம்
முன்னுரை:
இயற்கை என்பதே இயல்பாகவே உருவானவை. அவை இயல்பாகவே தோன்றி மறையும் பொருள்கள். அவற்றின் இயக்கம், அவை இயங்குகின்ற இடம், இயங்குகின்ற காலம் ஆகிய அனைத்தும் ஒன்றிணைந்து காட்சியளிப்பதே இயற்கையாகும். இயற்கையாய் உருவான நிலம், நீர், தீ, காற்று, வானம் என ஐம்பூதங்களால் ஆனது இவ்வுலகம்.

இயற்கை இன்பம் :
இயற்கை அன்னையின் அழகைக் காணக் கண் கோடி வேண்டும். பனிபடர்ந்த மலைகள், பச்சைப் பட்டாடை போர்த்தியும் அதில் வெள்ளிச் சரிகையாய் அருவிகளும் காண்போரைக் கவரும். பல விலங்கினங்களின் உறைவிடமாகத் திகழும் காடுகள், நீர்வாழ் விலங்கினங்களை வளர்க்கும் கடல், பல கோடி விண்மீன்களையும் சூரிய சந்திரனையும் தன்னகத்தே வைத்துள்ள வானத்தின் அதிசயத்தையும் கூறவியலாது.

இயற்கை இன்பத்தை இழக்கிறோம் :
இன்றைய நவீன வாழ்க்கை முறைகளால் இயற்கை மாற்றமடைகின்றது. மலைகளின் சரிவு, இயற்கைச் சீற்றங்களால் ஏற்பட்ட மாற்றங்கள் ஒரு பக்கம். மக்கள் தொகைப் பெருக்கத்தால் காடுகளையும், விளைநிலங்களையும் அழித்து வீடுகளாக்கினோம். தொழிற்சாலைக் கழிவுகளினால் நீரை மாசுபடுத்தினோம். நெகிழிப் பொருட்களை அளவுக்கதிகமாகப் பயன்படுத்தி நிலத்தை மாசுபடுத்தினோம். போக்குவரத்துச் சாதனங்களால் காற்றும் மாசுபட்டது. இவற்றால் புதிய நோய்கள் உருவாகிவிட்டன. வளரும் பிள்ளைகள் நோய்களோடு வளர்வதற்கு நாமே காரணமாகின்றோம்.

இயற்கைச் சூழல் :
வாழ்வின் அனைத்து அம்சங்களுமே ஒன்றொடொன்று தொடர்புடையவை ஆகும். மனிதர் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் ஒருவரையொருவர் சார்ந்தும் அனைவரையும் காத்துக் கொண்டிருக்கும் உயிர்ச்சூழலைச் சார்ந்துமே வாழ்கிறோம். அனைத்து உயிர்களும் அவற்றைக் காக்கின்ற உயிர்ச் சூழலும் மதிப்புமிக்கவையாக கருதப்படுகிறது. எனவே அவற்றை மதித்து அவற்றைக் காப்பது அவசியமாகும். வாழ்வின் அனைத்து நிலைகளிலும் இயற்கை வேண்டும். இயற்கை மருத்துவம், இயற்கை வேளாண்மை, இயற்கை உணவு என வாழ வேண்டும். இயற்கையான வழிகளில் நிலவளத்தைப் பெருக்கி வேளாண்மை செய்வதை அனைவரும் பின்பற்ற வேண்டும். பக்கவிளைவுகள், ஆபத்தான பின்விளைவுகள் உண்டாக்குகின்ற வேதிப்பொருட்களைத் தவிர்த்து விட வேண்டும். இயற்கையான மூலிகைகள், காய்கறிகள், பழங்களை விளைவிப்போம்.

முடிவுரை :
பொய்யாகவும் துன்பமாகவும் இருக்கும் செயற்கையைப் புறந்தள்ளிவிட்டு, மெய்யாகவும் இன்பமாகவும் இருக்கும் இயற்கையை ஏற்று நடப்போம். அணுத்தீமை, நீர்நிலை அழிப்பு, சுற்றுச்சூழல் கேடு எனப் பல்வேறு தீமைகளைத் தவிர்த்துவிட்டு, பசுமையான மாற்றுகளைக் கண்டறிந்து எதிர்காலத்தைத் தக்க வழிகளில் மாற்றியமைப்போம்.

மொழியோடு விளையாடு

திரட்டுக :
கடல் என்னும் பொருள் தரும் வேறு சொற்களைத் திரட்டுக.
1. அரி
2. அலை
3. ஆர்கலி
4. ஆழி
5. திரை
6. விரிநீர்
7. முந்நீர்
8. பரவை
9. சமுத்திரம்
10. அழவம்
11. பெருநீர்
12. பௌவம்

தொடர்களைப் பிரித்து இரண்டு தொடர்களாக எழுதுக

(எ.கா) பல நாள்களாக மழை பெய்யாததால் பயிர்கள் வாடின.
விடை : பல நாள்களாக மழை பெய்யவில்லை. பயிர்கள் வாடின.

Question 1.
கபிலன் வேலை செய்ததால் களைப்பாக இருக்கிறார்.
Answer:
கபிலன் வேலை செய்தார். களைப்பாக இருக்கிறார்.

Question 2.
இலக்கியா இனிமையாகப் பாடியதால் பரிசு பெற்றாள்.
Answer:
இலக்கியா இனிமையாகப் பாடினாள். பரிசு பெற்றாள்.

பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக

1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் …………. என்று பெயர். (பறவை / பரவை)
2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ……….. ஆற்றினார். (உரை/ உறை
3. முத்து தம் ………… காரணமாக ஊருக்குச் சென்றார். (பனி / பணி)
4. கலைமகள் தன் வீட்டுத் தோட்டத்தைப் பார்க்க வருமாறு தோழியை ……… (அலைத்தாள் / அழைத்தாள்)
Answer:
1. பரவை
2. உரை
3. பணி
4. அழைத்தாள்

பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக

வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக)

Question 1.
இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.
Answer:
சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

Question 2.
மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.
Answer:
பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

Question 3.
மிகப்பெரிய சாண்டியாகோ மீனைப் பிடித்தார்.
Answer:
சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.

Question 4.
மனிதர் இந்தியாவின் டாக்டர் சலீம் அலி பறவை.
Answer:
இந்தியாவின் பறவை மனிதர் டாக்டர் சலீம் அலி.

கட்டங்களில் சில சொற்கள் மறைந்துள்ளன. குறிப்புகளைக் கொண்டு அவற்றைக் கண்டுபிடித்து எழுதுக.

Questions.
1. இரட்டைக் காப்பியங்களில் ஒன்று……………..
2. முதலெழுத்துகளின் எண்ணிக்கை…………….
3. திங்கள் என்பதன் பொருள்……………….
4. சத்திமுத்தப் புலவரால் பாடப்பட்ட பறவை. ………………
5. பாரதியார் …………………. வேண்டும் என்று பாடுகிறார்.
6. ஆய்த எழுத்தின் வேறு பெயர்…………….
Answers:
1. மணிமேகலை
2. முப்பது
3. நிலவு
4. செங்கால் நாரை
5. காணி நிலம்
6. தனிநிலை

ஆய்ந்தறிக

Question 1.
பெருகிவரும் மக்களின் தேவைக்காக இயற்கையை அழிப்பது சரியா? இயற்கையைச் சுரண்டாமல், மக்களின் தேவைகளை நிறைவேற்ற மாற்று வழிகள் உண்டா?
Answer:
பெருகிவரும் மக்கள் தொகையின் காரணத்தினால் நமது தேவைகளும் பெருகிக் கொண்டே இருக்கின்றன. மனிதன் தோன்றியபோது அவன் கண்ட இயற்கைச் சூழலைக் கண்டு வியந்தான். அவற்றின் உதவியோடு வாழத் தொடங்கினான். காலப்போக்கில் நாகரிகம், பண்பாட்டு வளர்ச்சி எனப் பல படிநிலைகளில் மாற்றங்களைக் கண்டான்.

அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் மின்சாதனப் பொருட்கள், நெகிழிப் பொருட்கள் இவற்றால் நம் சுற்றுச்சூழலை மாசுபடுத்திவிட்டோம். இயற்கையாக அமைந்த நிலம், நீர், காடு, காற்று என எல்லாவற்றையும் மாசுபடுத்தி விட்டோம்.

காடுகளை அழித்து வீடுகள் கட்டினோம். தொழிற்சாலைகளை வளர்த்து நீர், காற்று ஆகியவற்றைச் சீர் கேடாக்கினோம். நிலத்தையும் விட்டுவைக்கவில்லை. இவையெல்லாம் சீர் அழிந்ததால் தேனீ, சிட்டுக்குருவி போன்ற பல உயிரினங்கள் அழிவதற்குக் காரணமாகி விட்டோம். தேனீக்கள் வளர்வதற்கான காட்டுப் பகுதிகள் அழிக்கப்பட்டன. ஆறுகளில் மணல் எடுக்கப்பட்டுவதால் நீரின் அளவும் சுவையும் நாளுக்கு நாள் மாறி வருகிறது.

நம் முன்னோர்கள் இயற்கையின் முக்கியத்துவம் உணர்ந்தனர். அதனால் அவற்றைத் தெய்வமாக எண்ணி வழிபட்டனர். இயற்கைக்கு மாறாக நாம் பல வழிகளில் இயற்கை வளங்களைக் குறைத்து விட்டோம்.

இயற்கை வளங்கள் என்பது ஒன்றோடொன்றுதொடர்புடைய சங்கிலித்தொடர் போன்றது. காடுகள் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும், மண் அரிப்பைத் தடுத்து நிறுத்தும், தட்ப வெப்பநிலையைச் சமமாக வைத்துக் கொள்ளும். காடுகள் அழிக்கப்படுவதால் தட்ப வெப்பநிலை மாற்றம் அடைகிறது. புவி வெப்பமயமாகிறது. பல்லுயிர்ப் பெருக்கம் அழிந்து வருகிறது. மழை வளம் குறைந்து விட்டது.

இவற்றை முற்றழிவிலிருந்து காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நெகிழிப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நெகிழிப் பொருட்கள் உருவாக்குவதைத் தடுக்க வேண்டும். சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் மேம்பாடுகள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு அரசு முடக்கம் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொருவரும் இயற்கையை நேசிக்க வேண்டும். இயற்கையைப் பாதுகாக்க, பசுமை அமைப்பு தோற்றுவிக்கப்பட வேண்டும். இந்தப் பசுமை அமைப்பு செழுமை, வளமை, தூய்மை என்ற அடிப்படையில் தனது திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும்.

அவ்வப்போது இயற்கை பற்றிய விழிப்புணர்வைத் தூண்டுமாறு பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் நிகழ்த்த வேண்டும். காடுகளை அழிக்காமல், மலைகளைத் தகர்க்காமல், மண் வளத்தைச் சுரண்டாமல் செயற்கைக் கருவிகளால் கரியமிலவாயுவைப் பெருக்காமல் புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் வழிமுறைகளைக் கடைபிடித்து நீர்நிலைகளைப் பாதுகாத்து நிலங்களை வளப்படுத்துவோம். குறைந்து வரும் வேளாண் தொழிலை புதுமுறைக் கல்வித் துறைகளால் மேம்படுத்தி பூமியைக் காப்போம் என்று ஒவ்வொருவரும் உறுதியேற்க வேண்டும்.

நாம் இல்லங்களில் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் விளக்குகள், மின்விசிறிகள் போன்றவற்றைத் தேவைக்கு அதிகமாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை

அதிர வருவதோர் நோய்” என்ற வள்ளுவத்திற்கேற்ப எதிர்காலத் தலைமுறையினரின் சிறப்பான வாழ்க்கைக்கு வழிகாட்டுவோம். இயற்கையைப் போற்றி வாழ்வோம்.

கவிதை படைக்க

கீழே காணப்படும் மழை பற்றிய கவிதையைச் சொந்தத் தொடர்களால் நிரப்புக.
வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
…………………………………
………………………………..
………………………………..
விடை :
வானில் இருந்து வந்திடும்
மனதில் மகிழ்ச்சி தந்திடும்
ஆற்றில் வெள்ளம் பெருகிடும்
அணைகள் நிரம்பி வழிந்திடும்
நிலத்தடி நீரும் ஊறிடும்
பயிர்கள் செழிக்க உதவிடும்
இயற்கை எல்லாம் சிரித்திடும்
இன்பக் கடலில் ஆழ்த்திடும்
பட்ட மரங்கள் துளிர்த்திடும்
பாரே உன்னைப் போற்றிடும்.

நிற்க அதற்குத் தக….

என் பொறுப்புகள்
அ) சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்வேன்.
ஆ) இயற்கைப் பாதுகாப்பேன்.

கலைச்சொல் அறிவோம்

1. கண்ட ம் – Continent
2. தட்பவெப்பநிலை – Climate
3. வானிலை – Weather
4. வலசை – Migration
5. புகலிடம் – Sanctuary
6. புவிஈர்ப்புப்புலம் – Gravitational Field

கடவுள் வாழ்த்து

Question 1.
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
Answer:
தெளிவுரை : அகரமே எழுத்துகளுக்குத் தொடக்கம். ஆதிபகவனே உலகுக்குத் தொடக்கம்.
விளக்கவுரை : தமிழ் எழுத்துகள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. அதுபோல இந்த உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.

வான் சிறப்பு

Question 2.
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி
Answer:
தெளிவுரை : மழை உரியகாலத்தில் பெய்யாது போனால், உலகத்து உயிர்களை எல்லாம் பசி துன்புறுத்தும்.
விளக்கவுரை : மழையானது தொடர்ந்து பெய்யப்படாமல் இருக்குமேயானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தமடையச் செய்யும்

Question 3.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
Answer:
தெளிவுரை : உரிய காலத்தில் பெய்யாது கெடுப்பதும் மழைதான். உரிய காலத்தில் பெய்து காப்பதும் மழைதான்.
விளக்கவுரை : மழையானது பெய்யாமல் வாழ்வைக்கெடுக்க வல்லது; மழையில்லாமல் இருக்கும் காலங்களில் நம்முடைய இயற்கை வளம் கெட்டு நொந்தவர்க்கும் துணையாய் இருந்துக் காக்கக் கூடியதும் மழைதான். நீத்தார் பெருமை

Question 4.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
Answer:
தெளிவுரை : முடியாத செயலையும் முடித்துக் காட்டுபவர் பெரியோர்; முடியாத என்பவர் சிறியோர்.
விளக்கவுரை : மனிதனுக்குச் செய்வதற்கு அருமையான செயல்களைச் செய்ய வல்லவரே பெரியோர்களாகும். செய்வதற்கரிய செயல்களைச் செய்ய இயலாதவர்கள் எல்லாம் சிறியோர்கள் என்பர்.

மக்கட்பேறு

Question 5.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
Answer:
தெளிவுரை : தம்மைவிடத் தம் பிள்ளைகள் அறிவுடையோர் என்றால் மக்களுக்கு அதுதான் மகிழ்ச்சி.
விளக்கவுரை : தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதைவிட உலகத்து.. உயிர்களுக்கு எல்லாம் மிகுந்த இன்பத்தைத் தரக்கூடியது ஆகும்.

Question 6.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
Answer:
தெளிவுரை : தன் பிள்ளையின் புகழைக் கேட்ட தாய் பெற்றெடுத்தபோது அடைந்த மகிழ்ச்சியைவிடப் பெருமகிழ்ச்சி அடைவாள்.
விளக்கவுரை : தன் மகனை நற்பண்புகள் நிறைந்தவன் என ஊரார் போற்றுவதைத் தன் காதால் கேட்டத் தாயானவள் தன்னுடைய மகனைப் பெற்ற நேரத்தில் மகிழ்ச்சி அடைந்ததைவிட இப்பொழுது பெரிதும் மகிழ்ச்சி அடைவாள்.

அன்புடைமை

Question 7.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு .
Answer:
தெளிவுரை : அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளும் எனக்கே என்பார்கள். அன்பு உடையவர்கள் தம் உடம்பும் பிறர்க்கே என்பார்கள்.
விளக்கவுரை : தன்னுடைய உள்ளத்தில் அன்பு இல்லாதவர்கள் எல்லாப் பொருள்களையும் தமக்கே சொந்தம் எனக் கொண்டு வாழ்வார்கள். உள்ளத்தில் அன்பு உடையவர்கள் தம் உடமையையும் மற்றவர்களுக்குச் சொந்தம் என வாழ்வார்கள்.

Question 8.
அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
Answer:
தெளிவுரை : அன்பு இருப்பதுதான் உயிருள்ள உடல். அன்பு இல்லாதது வெறும் எலும்பும் தோலும் தான்.
விளக்கவுரை : உள்ளமானது அன்பின் வழியாக இயங்குகின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாகும். உள்ளத்தில் அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்திய வெற்று உடம்பே ஆகும்.

இனியவை கூறல்

Question 9.
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.
Answer:
தெளிவுரை : பணிவும் இன்சொல்லுமே ஒருவருக்கு மிகச்சிறந்த அணி.
விளக்கவுரை : பணிவு மிக்கவர்களாகவும் இன்பம் தரும் சொல் வழங்குவோனாகவும் இருப்பதுவே ஒருவருக்கு மிகச் சிறந்த அணிகலனாகும். மற்ற உடம்பில் அணியும் அணிகலன்கள் அணிகலன்கள் ஆகாது.

Question 10.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று.
Answer:
தெளிவுரை : இனிய சொல் இருக்கும் போது இன்னாச்சொல் பேசுவது கனி இருக்கும்போது காயை உண்பதைப் போன்றது.
விளக்கவுரை : இனிமையான சொற்கள் இருக்கும்போது அவற்றைத் தவிர்த்துவிட்டுத் தீயச் சொற்களைக் கூறுதல் என்பது கனிகள் இருக்கும் போது அவற்றை விடுத்துக் காய்களைப் பறித்துத் தின்பதைப் போன்றதாகும்.

நூல் வெளி
இந்நூல் மூன்று பிரிவுகளைக் கொண்டது அவை :
1. அறத்துப்பால் : இயல்-4 பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் 38 அதிகாரம் – 380 குறள்பாக்கள்
2. பொருட்பால் : இயல் 3 – அரசியல், அங்கவியல், ஒழிபியல் 70 அதிகாரம் – 700 குறட்பாக்கள்
3. இன்பத்துப்பால் : இயல் 2 – களவியல், கற்பியல் 25 அதிகாரம் – 250 குறள்
4. வேறுபெயர்கள் : முப்பால், உத்தரவேதம், தெய்வநூல், உலகப்பொதுமறை, வாயுறை வாழ்த்து.

Also Read : Chapter-3.1----Ariviyal-atticuti-Chapter-3-Term-1-6th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen