SaraNextGen.Com

Chapter 1.1 - Tamilmoli valttu - Chapter 1 Term 1 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.1 தமிழ்மொழி வாழ்த்து

Question 1.
‘தமிழ்மொழி வாழ்த்து’ – பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
இப்பாடலை இசையுடன் பாடி பழக வேண்டும்.

Question 2.
படித்துச் சுவைக்க.
Answer:
செந்தமிழ் அந்தாதி

செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்
நந்தா விளக்கனைய நாயகியே – முந்தை
மொழிக்கெல்லாம் மூத்தவளே மூவேந்தர் அன்பே
எழில்மகவே எந்தம் உயிர்.
உயிரும் நீ மெய்யும் நீ ஓங்கும் அறமாம்
பயிரும் நீ இன்பம் நீ அன்புத் தருவும்நீ
வீரம் நீ காதல் நீ ஈசன் அடிக்குநல்
ஆரம்நீ யாவும் நீ யே! – து. அரங்கன்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் ………
அ) வைப்பு
ஆ) கடல்
இ) பரவை
ஈ) ஆழி
Answer:
அ) வைப்பு

Question 2.
‘என்றென்றும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………
அ) என் + றென்றும்
ஆ) என்று + என்றும்
இ) என்றும் + என்றும்
ஈ) என் + என்றும்
Answer:
ஆ) என்று + என்றும்

Question 3.
‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ….
அ) வான + மளந்தது
ஆ) வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது
ஈ) வான் + மளந்தது
Answer:
இ) வானம் + அளந்தது

Question 4.
அறிந்தது + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்……………….
அ) அறிந்தது அனைத்தும்
ஆ) அறிந்தனைத்தும்
இ) அறிந்ததனைத்தும்
ஈ) அறிந்துனைத்தும்
Answer:
இ) அறிந்ததனைத்தும்

Question 5.
வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………..
அ) வானம் அறிந்து
ஆ) வான் அறிந்த
இ) வானமறிந்த
ஈ) வான்மறிந்த
Answer:
இ) வானமறிந்த

தமிழ்மொழி வாழ்த்துஇப்பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

மோனைச் சொற்கள் :

வாழ்க – வாழிய
வான மளந்தது – வண்மொழி
எங்கள் – என்றென்றும்
வாழ்க – வாழ்க
வானம் – வளர்மொழி

குறுவினா

Question 1.
தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
Answer:
தமிழ் புகழ் கொண்டு வாழுமிடம் : ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்டு வாழ்கிறது.

Question 2.
தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?
Answer:
தமிழின் வளர்ச்சி : தமிழ் மொழி, வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளர்கிறது

சிறுவினா

Question 1.
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகளை எழுதுக.
Answer:
தமிழ் மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும் கருத்துகள்:

(i) தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்கிறது.

(ii) ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான மொழி.

(iii) ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து புகழ் கொண்ட மொழி.

(iv) எங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழும்.

(v) எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும். அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படையும்.

(vi) பொருந்தாத பழைய கருத்துக்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிரவேண்டும்.

(vii) வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழியைப் பாரதியார், என்றென்றும் வாழ்க ! வாழ்க! என்று வாழ்த்துகிறார்.

சிந்தனை வினா

Question 1.
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் என்ன?
Answer:
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம் :

(i) தமிழ் மொழி, தமிழ் பேசும் பலருடைய தாய்மொழி. திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழி. எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக விளங்குகிறது.

(ii) தமிழ், அறிவியல், மருத்துவம், கணிதம் எனப் பலவற்றையும் கூறுகிறது. தமிழர்
வானியல் அறிவிலும் சிறந்து விளங்கியுள்ளனர். வான் பற்றிய செய்திகளைக் கூறும் நூல்கள் தமிழில் உள்ளன. ஞாயிறு, திங்கள், விண்மீன் மற்றும் வானில் வலம் வரும் கோள்கள் பற்றியும் ஆராய்ந்து கூறியுள்ளனர் தமிழர்.

(iii) இலக்கிய வளம், இலக்கணவளம், சொல்வளம் என எல்லா வளங்களையும் தமிழ்மொழி பெற்றுள்ளதால் பாரதியார் தமிழ்மொழியை வண்மொழி என்று அழைக்கிறார்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. நிரந்தரம் – காலம் முழுமையும்
2. வைப்பு – நிலப்பகுதி
3. சூழ்கலி – சூழ்ந்துள்ள அறியாமை இருள்
4. வண்மொழி – வளமிக்க மொழி
5. இசை – புகழ்
6. தொல்லை – பழமை , துன்பம்

நிரப்புக :

1. தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் அமைந்துள்ள பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது.
2. பாரதியார் நடத்திய இதழ்கள் இந்தியா, விஜயா.
3. பாரதியாரின் உரைநடை நூல்கள் சந்திரிகையின் கதை, தராசு.
4. மொழி மக்களின் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்புடையது.

விடையளி :

Question 1.
சுப்பிரமணிய பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் யாவை?
Answer:
கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் போன்றவை பாரதியாரின் பன்முக ஆற்றல்கள் ஆகும்.

Question 2.
தமிழ்நாடு எவ்வகைத் துன்பங்கள் நீங்கி ஒளிர வேண்டும்?
Answer:
பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர வேண்டும்.

Question 3.
பாரதிதாசன் பாரதியாரை எவ்வாறெல்லாம் புகழ்ந்துள்ளார்?
Answer:
பாரதிதாசன், பாரதியாரைப் புகழ்ந்தமை :

(i) சிந்துக்குத் தந்தை
(ii) செந்தமிழ்த் தேனீ
(iii) புதிய அறம் பாட வந்த அறிஞன்
(iv) மறம் பாட வந்த மறவன்.

Question 4.
பாரதியார் இயற்றியவைகளாக நும் பாடப் பகுதியில் குறிப்பிடப்பட்டவை எவை?
Answer:
(i) சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்கள்.
(ii) வசன கவிதைகள்
(iii) சீட்டுக்கவிகள் ஆகியவையாகும்.

Question 5.
தமிழ்மொழி, எதனால் சிறப்படைய வேண்டும் என்று பாரதியார் கூறுகிறார்?
Answer:
தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்ந்து, எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருளை நீக்கும். அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படையும்.

Question 6.
தமிழ்மொழி எவற்றை அறிந்து வளரும் என்று பாரதியார் கூறுகிறார்?
Answer:
தமிழ்மொழி வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் என்று பாரதியார் கூறுகிறார்.

ஆசிரியர் குறிப்பு

கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூகச் சீர்திருத்தச் சிந்தனையாளர், விடுதலைப் போராட்ட வீரர் எனப் பன்முக ஆற்றல் கொண்டவர் சி.சுப்பிரமணிய பாரதியார். இந்தியா, விஜயா, முதலான இதழ்களை நடத்தி விடுதலைப் போருக்கு வித்திட்டவர். கவிதைகள் மட்டுமின்றி, சந்திரிகையின் கதை, தராசு உள்ளிட்ட உரைநடை நூல்களையும் வசனகவிதைகளையும் சீட்டுக்கவிகளையும் எழுதியவர். சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞன், மறம் பாட வந்த மறவன் என்றெல்லாம் பாரதிதாசன் இவரைப் புகழ்ந்துள்ளார்.

இப்பாடல் பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் தமிழ்மொழி வாழ்த்து என்னும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது.

பாடலின் பொருள்

தமிழ்மொழி எக்காலத்தும் நிலைபெற்று வாழ்க! ஆகாயத்தால் சூழப்பட்ட எல்லாவற்றையும் அறிந்து உரைக்கும் வளமான தமிழ்மொழி வாழ்க! ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ் கொண்ட தமிழ்மொழி வாழ்க! எங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழி உலகம் உள்ள வரையிலும் வாழ்க! எங்கும் சூழ்ந்துள்ள அறியாமை இருள் நீங்கட்டும்! அதனால் தமிழ்மொழி மேன்மையுற்று உலகம் முழுவதும் சிறப்படைக! பொருந்தாத பழைய கருத்துகளால் உண்டாகும் துன்பங்கள் நீங்கித் தமிழ்நாடு ஒளிர்க! தமிழ்மொழி வாழ்க! தமிழ்மொழி வாழ்க! என்றென்றும் தமிழ்மொழி வாழ்க! வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும் அறிந்து மேன்மேலும் வளரும் தமிழ்மொழி வாழ்க!

Also Read : Chapter-1.2---Tamilmoli-marapu-Chapter-1-Term-1-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen