SaraNextGen.Com

Chapter 1.2 - Tamilmoli marapu - Chapter 1 Term 1 8th Tamil Guide Samacheer Kalvi Solutions - SaraNextGen [2024-2025]


Updated By SaraNextGen
On April 24, 2024, 11:35 AM

Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.2 தமிழ்மொழி மரபு

Question 1.
பறவைகளின் ஒலி மரபுகளை எழுதி வருக.
Answer:
(எ.கா) காகம் கரையும்.
(i) ஆந்தை : அலறும்
(ii) கிளி : பேசும்
(iii) குயில் : கூவும்
(iv) புறா : குனுகும்
(v) மயில் : அகவும்
(vi) குருவி : கீச்சிடும்
(vii) கோழி : கொக்கரிக்கும்
(viii) சேவல் : கூவும்
(ix) வண்டு : முரலும்
(x) கூகை : குழறும்

Question 2.
ஐம்பூதங்கள் ஒவ்வொன்றிற்கும் வழங்கப்படும் வேறு பெயர்களை எழுதுக.
Answer:
(i) நிலம் – பூமி, தரை, புவி
(ii) நீர் – புனல், தண்ணீர்
(iii) தீ – அனல், நெருப்பு, கனல்
(iv) காற்று – வளி, கால்
(v) வானம் – ஆகாயம், விண்

Question 3.
ஐம்பூதங்களின் படங்களைச் சேகரித்துப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
பறவைகள் ………… பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில்
ஆ) விசும்பில்
இ) மரத்தில்
ஈ) நீரில்
Answer:
ஆ) விசும்பில்

Question 2.
இயற்கையைப் போற்றுதல் தமிழர் ……………… –
அ) மரபு
ஆ) பொழுது
இ) வரவு
ஈ) தகவு
Answer:
அ) மரபு

Question 3.
‘இருதிணை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) இரண்டு + திணை
ஆ) இரு + திணை
இ) இருவர் + திணை
ஈ) இருந்து + திணை
Answer:
அ) இரண்டு + திணை

Question 4.
‘ஐம்பால்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………..
அ) ஐம் + பால்
ஆ) ஐந்து + பால்
இ) ஐம்பது + பால்
ஈ) ஐ + பால்
Answer:
ஆ) ஐந்து + பால்

குறுவினா

Question 1.
உலகம் எவற்றால் ஆனது?
Answer:
உலகம் ஐம்பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகியவற்றால் ஆனது.

Question 2.
செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?
Answer:
செய்யுளில் திணை, பால், வேறுபாடறிந்து மரபான சொற்களைப் பயன்படுத்துதல் வேண்டும். மரபுகளை மாற்றினால் பொருள் மாறிவிடும்.

சிந்தனை வினா

Question 1.
நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என நீங்கள் கருதுகிறீர்கள்?
Answer:
(i) உலகில் உள்ள எல்லாப் பொருள்களையும் இருதிணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறியுள்ளது தமிழ்மொழி. இது இம்மொழியின் மரபு.

(ii) நம் முன்னோர் ஒழுக்கத்தின் அடிப்படையில் உயர்திணை, அஃறிணை எனப் பிரித்துள்ளனர்.

(iii) உயர்திணைக்குரிய பால்களாக ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியவற்றையும் அஃறிணைக்குரிய பால்களாக ஒன்றன்பால், பலவின்பால் ஆகியவற்றையும் வகைப்படுத்திப் பயன்படுத்தியுள்ளனர்.

(iv) இம்மரபினை மாற்றாமல் பயன்படுத்தினால் மட்டுமே பொருள் மாறாமல் இருக்கும். இதனையறிந்த நம் முன்னோர் மரபு மாறாமல் பின்பற்றியுள்ளனர்.

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. விசும்பு – வானம்
2. மயக்கம் – கலவை
3. இருதிணை – உயர்திணை, அஃறிணை
4. வழாஅமை – தவறாமை
5. ஐம்பால் – ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்
6. மரபு – வழக்கம்
7. திரிதல் – மாறுபடுதல்
8. செய்யுள் – பாட்டு
9. தழாஅல் – தழுவுதல் (பயன்படுத்துதல்)

நிரப்புக :

1. தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
2. நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம்.
3. தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
4. தொல்காப்பிய அதிகாரங்கள் ஒவ்வொன்றும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
5. மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க கண்டுபிடித்தது மொழி.

விடையளி :

Question 1.
தொல்காப்பியம் – குறிப்பு எழுதுக.
Answer:
(i) தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கணநூல் தொல்காப்பியம்.

(ii) இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.

Question 2.
அளபெடை என்பது யாது?
Answer:
(i) அளபெடை – நீண்டு ஒலித்தல்.

(ii) சில எழுத்துகள் அவற்றுக்கு உரிய மாத்திரை அளவை விட நீண்டு ஒலிக்கும். அதனை அளபெடை என்பர்.

Question 3.
உயிரளபெடை என்றால் என்ன?
Answer:
(i) உயிரெழுத்துகள் நீண்டு ஒலிப்பதை உயிரளபெடை என்பர். அளபெடுத்ததற்கு அடையாளமாக உயிர்மெய் நெடிலுக்குப் பக்கத்தில் அதன் இன எழுத்து எழுதப்படும்.

(ii) (எ.கா.) வழாஅமை ழா – ழ் + ஆ; ‘ஆ’ – இன எழுத்து ‘அ)

Question 4.
புலி, சிங்கம், யானை, பசு, கரடி இவற்றின் இளமைப் பெயர்களை எழுதுக.
Answer:
(i) புலி – பறழ்
(ii) சிங்கம் – குருளை
(iii) யானை – கன்று
(iv) பசு – கன்று
(V) கரடி – குட்டி

Question 5.
புலி, சிங்கம், யானை, பசு, கரடி இவற்றின் ஒலிமரபினை எழுதுக.
Answer:
(i) புலி – உறுமும்
(ii) சிங்கம் – முழங்கும்
(iii) யானை – பிளிறும்
(iv) பசு – கதறும்
(v) கரடி – கத்தும்

Question 6.
நிலம், நீர், தீ, வளி, விசும்பு’ என்று தொடங்கும் நூற்பாக்களின் மூலம் தொல்காப்பியம் கூறுவனவற்றை எழுதுக.
Answer:
(i) இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும்.

(ii) உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபாகும். திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம்முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும்.

(iii) இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும். தமிழ்மொழிச் சொற்களை வழங்குதலில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

நூல் வெளி

தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர். தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இந்நூல் எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது. பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92, 93) இங்குத் தரப்பட்டுள்ளன.

பாடலின் பொருள்

இவ்வுலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையாகும். இவ்வுலகில் தோன்றிய பொருள்கள் அனைத்தும் இந்த ஐம்பூதங்களின் சேர்க்கையால் உருவானவையே ஆகும். உலகத்துப் பொருள்களை இரு திணைகளாகவும் ஐம்பால்களாகவும் பாகுபடுத்திக் கூறுதல் தமிழ்மொழியின் மரபு.

திணை, பால் வேறுபாடு அறிந்து, இவ்வுலகப் பொருள்களை நம் முன்னோர் கூறிய சொற்களால் கூறுதல் வேண்டும். இம்மரபான சொற்களையே செய்யுளிலும் பயன்படுத்துதல் வேண்டும்.

தமிழ்மொழிச் சொற்களை வழங்குவதில் இம்மரபு மாறினால் பொருள் மாறிவிடும்.

Also Read : Chapter-1.3---Tamil-varivativa-valarcci-Chapter-1-Term-1-8th-Tamil-Guide-Samacheer-Kalvi-Solutions

SaraNextGen