மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
Question 1.
அரசரை அவரது …………………….. காப்பாற்றும்.
அ) செங்கோல்
ஆ) வெண்கொற்றக்குடை
இ) குற்றமற்ற ஆட்சி
ஈ) படை வலிமை
Answer:
இ) குற்றமற்ற ஆட்சி
Question 2.
சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் ………………. தகுதி அறிந்து பேச வேண்டும்.
அ) சொல்லின்
ஆ) அவையின்
இ) பொருளின்
ஈ) பாடலின்
Answer:
ஆ) அவையின்
Question 3.
‘கண்ணோடாது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது …………….
அ) கண் + ஓடாது
ஆ) கண் + ணோடாது
இ) க + ஓடாது
ஈ) கண்ணோ + ஆடாது
Answer:
அ) கண் + ஓடாது
Question 4.
‘கசடற’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………….
அ) கச + டற
ஆ) கசட + அற
இ) கசடு + உற
ஈ) கசடு + அற
Answer:
ஈ) கசடு + அற
Question 5.
என்ற + ஆய்ந்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ……………..
அ) என்றாய்ந்து
ஆ), என்று ஆய்ந்து
இ) என்றய்ந்து
ஈ) என் ஆய்ந்து
Answer:
அ) என்றாய்ந்து
குறுவினா
Question 1.
நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படைக்கும் வழி யாது?
Answer:
இச்செயலை இந்த வகையால் இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
Question 2.
சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?
Answer:
எதையும் நன்கு ஆராய்ந்து ஒரு பக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.
Question 3.
அரசன் தண்டிக்கும் முறை யாது?
Answer:
ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும். இதுவே அரசன் தண்டிக்கும் முறை ஆகும்.
Question 4.
சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?
Answer:
கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொல்லாற்றலின் இயல்பாகும்.
பின்வரும் நிகழ்வுக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.
பள்ளி ஆண்டுவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் கலைக்குழுத் தலைவராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்று பேசப்பட்டது. ஆசிரியர்கள் பள்ளி மாணவர் தலைவன் செழியனை பரிந்துரைத்தனர். தலைமை ஆசிரியர் செழியன் மாணவர் தலைவனாக இருக்கிறான். ஆனால் இது கலைக்குழுவிற்கான தலைவர் பதவி. நடனம், இசை, நாடகம் என அனைத்துத் துறைகளிலும் ஆர்வமுள்ள ஒருவரே இதற்குத் தகுதியானவர். எனவே என்னுடைய தேர்வு கலையரசன்’ என்று நன்கு ஆராய்ந்து கூறினார். ஆசிரியர்கள் அனைவரும் சிறந்த தேர்வு’ என்று மகிழ்ந்தனர்.
1. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.
2. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
Answer:
2. இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
தெரிந்து வினையாடல்
1. செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
தெளிவுரை : செயலாற்றும் திறன் உடையவரையும் செய்ய வேண்டிய செயலையும் செய்வதற்குரிய காலத்தையும் ஆராய்ந்து அச்செயலை நிறைவேற்ற வேண்டும்.
2. இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
தெளிவுரை : இச்செயலை இந்த வகையால் இவர் செய்து முடிப்பார் என்று ஆராய்ந்து அச்செயலை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.
செங்கோன்மை
3. ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வஃதே முறை.
தெளிவுரை : எதையும் நன்கு ஆராய்ந்து ஒரு பக்கம் சாயாது நடுவுநிலையில் நின்று நடத்துவதே சிறந்த ஆட்சியாகும்.
4. இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்
தெளிவுரை : உலகத்து உயிர்களை எல்லாம் அரசர் காப்பாற்றுவார். அவரை அவரது குற்றமற்ற ஆட்சி காப்பற்றும்.
வெருவந்த செய்யாமை
5. தக்காங்கு நாடித் தலைசெல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.
தெளிவுரை : ஒருவர் செய்த குற்றத்தை முறையாக ஆராய்ந்து அவர் மீண்டும் குற்றம் செய்யாதவாறு தண்டிப்பது அரசனின் கடமையாகும்.
6. இறைகடியன் என்றுஉரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும்.
தெளிவுரை : நம் அரசர் கடுமையானவர் என்று குடிமக்களால் தூற்றப்படும் கொடுஞ்சொல்லை உடைய அரசர், தன் வாழ்நாள் குறைந்து விரைவில் அழிவார்.
சொல்வன்மை
7. கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவாதம் சொல்.
தெளிவுரை : கேட்பவரைத் தன்வயப்படுத்துவதும் கேளாதவரைக் கேட்கத் தூண்டுவதும் சிறந்த சொற்றலாற்றலின் இயல்பாகும்.
8. சொல்லுக சொல்லைப் பிறர்ஓர்சொல் அச்சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து.
தெளிவுரை : நாம் சொல்லும் சொல்லை வேறு சொல்லால் வெல்ல இயலாதவாறு சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேச வேண்டும்.
அவையறிதல்
9. அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மை யவர்.
தெளிவுரை : சொல்வளமும் நற்பண்பும் உடையவர்கள் தாம் பேசும் அவையின் தகுதி அறிந்து பேசுதல் வேண்டும்.
10. கற்று அறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து.
தெளிவுரை : சொற்களை ஆராயும் அறிஞர் நிறைந்த அவையில் பேசும்போதுதான் பல நூல்களைக் கற்றவரின் கல்வி பெருமையடையும்.
நூல் வெளி
பெருநாவலர், முதற்பாவலர், நாயனார் முதலிய பல சிறப்புப் பெயர்களால் குறிக்கப்படும் திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்.
திருக்குறள் உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் ஆகும். இந்நூல் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது. அறத்துப்பால் பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்களைக் கொண்டது. பொருட்பால் அரசியல், அமைச்சியல், ஒழிபியல் என்னும் மூன்று இயல்களைக் கொண்டது. இன்பத்துப்பால் களவியல், கற்பியல் என்னும் இரண்டு இயல்களைக் கொண்டது.