WELCOME TO SaraNextGen.Com

Chapter 5.6 - Tirukkural - Chapter 5.6 - திருக்குறள் - Term 2 - 6th Tamil Guide Samacheer Kalvi Solutions

Updated On 26-08-2025 By Lithanya


You can Download the Chapter 5.6 - Tirukkural - Chapter 5.6 - திருக்குறள் - Term 2 - 6th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends

Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Detailed Solutions Of Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 5.6 திருக்குறள்

Question 1.
பாடப்பகுதியில் இடம்பெற்ற அதிகாரங்களில் உள்ள திருக்குறள்காரன் ஐந்தனைப் பொருளுடன் எழுதி வந்து வகுப்பில் பொருளுடன் பகிர்க
Answer:
விருந்தோம்பல் : விருந்தோம்பல் என்பது ஒரு விருந்தினர் மற்றும் அவரது புரவலர் ஆகியோருக்கு இடையிலான உறவு அல்லது பொதுவாக, உயிர்களுக்கு ஆதரவளிக்கும் குணத்தைக் குறிப்பது. அதாவது, விருந்தினர், அந்நியர்களை வரவேற்று விருந்தோம்பி மகிழ்விப்பதாகும்.

1. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தேம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.
பொருள் : வீட்டில் இருந்து, பொருள்களைச் சேர்த்தும் காத்தும் வாழ்வது எல்லாம் வந்த விருந்தினரைப் பேணி அவர்களுக்கு உதவுவதற்கே ஆகும்.

2. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.
பொருள் : தன்னை நோக்கி வரும் விருந்தினரை நாள்தோறும் போற்றுகின்றவனுடைய வாழ்க்கை துன்பத்தால் வருந்திக் கெட்டுப் போவதில்லை.

3. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.
பொருள் : நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள்.

கள்ளாமை : தனக்கு உரிமையில்லாத மற்றவர் உடைமையை அவரறியாமல் கைக்கொள்ளவோ வஞ்சித்து எடுத்துக் கொள்ளவோ, எண்ணாதிருத்தலும் அங்ஙனம் செய்யாதிருத்தலும் கள்ளாமை ஆகும்.

1. எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு.
பொருள் : பிறரால் இகழப்படாமல் வாழ விரும்புகிறவன், எத்தன்மையானப் பொருளையும் பிறரிடமிருந்து வஞ்சித்துக் கொள்ள எண்ணாதபடி தன் நெஞ்சைக் காக்க வேண்டும்.

2. அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல்.
பொருள் : அருளைப் பெரிதாகக் கருதி அன்புடையவராய் நடத்தல் பிறருடைய பொருளைக் கவர எண்ணி அவர் சோர்ந்திருக்கும் நிலையைப் பார்ப்பவரிடத்தில் இல்லை .

3. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு.
பொருள் : நேர்மையுள்ளவர் நெஞ்சம் அறவழியில் செல்லும். கொள்ளையடிப்போர் நெஞ்சமோ குறுக்குவழியான வஞ்சக வழியில் செல்லும்.

Question 2.
திருக்குறள் உலகப் பொதுமறை எனப்படுவது ஏன்? வகுப்பறையில் பேசுக.
Answer:
திருக்குறள் உலகப்பொதுமறை :
(i) திருக்குறள் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ‘தமிழுக்குக் கதி’ எனச் சிறப்பிக்கப்படுவது. (க-கம்பராமாயணம், தி – திருக்குறள்) நம் தாய்மொழியான தமிழ்மொழிக்கு மணிமகுடம் போன்றது. புகழ்பெற்ற இலக்கியமாகும். திருக்குறள் நூலானது திருவள்ளுவரின் தற்சிந்தனை அடிப்படையில் தமிழ்மொழியில் இயற்றப்பட்ட நூலாகும். மேலும், திருக்குறளில் கூறப்பட்டுள்ள கருத்துகள் உலகின் பல்வேறு சமயங்கள் வலியுறுத்துபவையுடன் ஒப்பிடப்பட்டு, அது பல்வேறு சமயங்களுடனும் பொருந்துவதாகப் பல்வேறு சமயத்தாராலும் கருதப்பட்டு வருகிறது.

(ii) இந்நூல் உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்துள்ளமையால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.

(iii) உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் பெற்றுள்ளது. இதுவரை 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.

விருந்தினரின் முகம் எப்போது வாடும்?
அ) நம் முகம் மாறினால்
ஆ) நம் வீடு மாறினால்
இ) நாம் நான்கு வரவேற்றால்
ஈ) நம் முகவரி மாறினால்
Answer:
அ) நம் முகம் மாறினால்

Question 2.
நிலையான செல்வம் …………………..
அ) தங்கம்
ஆ) பணம்
இ) ஊக்கம்
ஈ) ஏக்கம்
Answer:
இ) ஊக்கம்

Question 3.
ஆராயும் அறிவு உடையவர்கள் ………………. சொற்களைப் பேசமாட்டார்.
அ) உயர்வான
ஆ) விலையற்ற
இ) பயன்தராத
ஈ) பயன்உடைய
Answer:
இ) பயன்தராத

Question 4.
பொருளுடைமை என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………..
அ) பொருளுடைமை
ஆ) பொருளுடைமை
இ) பொருள்+உடைமை
ஈ) பொருள்+ளுடைமை
Answer:
இ) பொருள்+உடைமை

Question 5.
உள்ளுவது + எல்லாம் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ……………
அ) உள்ளவது எல்லாம்
ஆ) உள்ளுவதெல்லாம்
இ) உள்ளுவத்தெல்லாம்
ஈ) உள்ளுவதுதெல்லாம்
Answer:
ஆ) உள்ளுவதெல்லாம்

Question 6.
பயன் + இலா என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் …………..
அ) பயனிலா
ஆ) பயன்னில்லா
இ) பயன் இலா
ஈ) பயன் இல்லா
Answer:
அ) பயனிலா

நயம் அறிக

Question 1.
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.
இக்குறளில் உள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
அடி எதுகை : உள்ளுவது – தள்ளினும்
அடி மோனை : உள்ளுவது – உயர்வுள்ளல்

இடம் மாறியுள்ள சீர்களை முறைப்படுத்தி எழுதுக

Question 1.
பணிவுடையன் ஆதல் இன்சொலன் ஒருவற்கு
மற்றுப் பிற அணியல்ல.
Answer:
பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற.

Question 2.
உள்ளுவது உயர்வுள்ளல் எல்லாம் மற்றது
தள்ளாமை தள்ளினும் நீர்த்து.
Answer:
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து.

Question 3.

“ஊக்கமது கைவிடேல்” என்பது ஒளவையாரின் ஆத்திசூடி, இவ்வரியோடு தொடர்புடைய திருக்குறளைத் தேர்ந்தெடுக்க.

1. விருந்து புறத்ததாத் தாணுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் அன்று.

2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

3. சொல்லுக சொல்லில் பயனுடைய
சொல்லற்க சொல்லில் பயன் இலாச் சொல்.
Answer:
2. உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும்.

பின்வரும் கதைக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுக்க,

வீட்டிற்குள் வந்த வேலனை தந்தை அழைத்தார். “உங்கள் பள்ளியில் பேச்சுப்போட்டி நடப்பதாகக் கூறினாயே, பெயர் கொடுத்து விட்டாயா?” என்று கேட்டார். “இல்லையப்பா, அமுதன் என்னைவிட நன்றாகப் பேசுவான். அவனுக்குத்தான் பரிசு கிடைக்கும். எனவே நான் பெயர் கொடுக்கவில்லை” என்றான் வேலன். “போட்டியில் வெற்றியும் தோல்வியும் இயல்புதான். அதற்காகப் போட்டியிடாமல் விலகக்கூடாது. நாம் எந்த அளவு ஊக்கத்துடன் செயல்படுகிறோமோ அந்த அளவிற்கு வெற்றி கிடைக்கும். எனவே நீ போட்டியில் கலந்துகொள்” என்றார் அப்பா. உற்சாகம் அடைந்தான் வேலன். “நாளை பெயர் கொடுத்துவிடுகிறேன்” என்றான்.

1. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

2. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

3. அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல்.
Answer:
2. வெள்ளத்து அனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத்து அனையது உயர்வு.

குறுவினா

Question 1.
எப்படி உண்பது விரும்பத்தக்கது அன்று?
Answer:
உண்ணப்படும் பொருள் அமிழ்தமே ஆனாலும் தன்னை நோக்கி வந்த விருந்தினர் இருக்கும் போது தான் மட்டும் உண்பது விரும்பத்தக்கது அன்று.

Question 2.
எது தீமையானது என்று வள்ளுவர் கூறுகின்றார்?
Answer:
பிறருடைய பொருளை அவர் அறியா வகையில் களவாடலாம் என உள்ளத்தால் நினைப்பதுகூடத் தீமையானது.

Question 3.
ஆக்கம் யாரிடம் வழிகேட்டுச் செல்லும்?
Answer:
தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழி கேட்டுக் கொண்டு செல்லும்.

Question 4.
நாம் எத்தகைய சொற்களைப் பேச வேண்டும் என்று வள்ளுவர் கூறுகின்றார்?
Answer:
நாம் பயனுடைய சொற்களை மட்டும் பேச வேண்டும்.

கூடுதல் வினாக்கள்

Question 1.
அனிச்சமலர் குறித்து வள்ளுவர் கூறுவது யாது?
Answer:
அனிச்ச மலர் முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடும். அதுபோல் நாம் முகம் மாறினால் விருந்தினர் உள்ளம் வாடிவிடும்.

Question 2.
அழியும் செல்வம் எது?
Answer:
களவு மூலம் சேர்க்கப்படும் செல்வம் வளர்வது போலத் தோன்றினாலும் முடிவில் அழிந்து விடும்.

Question 3.
ஊக்கமுடைமை என்ற அதிகாரத்தின் மூலம் கூறப்பட்ட கருத்துகள் யாவை?
Answer:
(i) ஊக்கமே நிலையான செல்வம். மற்றவை எல்லாம் நிலைத்து நில்லாமல் அழிந்து விடும்.
(ii) தளராத ஊக்கம் உடையவனிடம் ஆக்கமானது தானே வழிகேட்டுக் கொண்டு செல்லும்.
(iii) தண்ணீ ரின் உயரத்துக்கு ஏற்ப நீர்ப் பூக்கள் வளரும். ஊக்கத்தின் அளவுக்கு ஏற்ப மனிதர்கள் உயர்வார்கள்.
(iv) எண்ணுவதை உயர்வாகவே எண்ணுக. எண்ணியதை அடையாவிட்டாலும் எண்ணமே மனநிறைவைத் தருக.

Question 4.
பயன் தராத சொற்களைப் பேசாதவர் யார்?
Answer:
நன்மை எது என ஆராயும் அறிவு உடையவர்கள் பயன் தராத சொற்களைப் பேசமாட்டார்கள்.