Chapter 8.3 - Pacippini pokkiya pavai - Chapter 8.6 - திருக்குறள் - Term 3 - 6th Tamil Guide Samacheer Kalvi Solutions
Updated On 26-08-2025 By Lithanya
You can Download the Chapter 8.3 - Pacippini pokkiya pavai - Chapter 8.6 - திருக்குறள் - Term 3 - 6th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends
Share this to Friend on WhatsApp
Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை
Detailed Solutions Of Samacheer Kalvi 6th Tamil Guide Chapter 8.3 பசிப்பிணி போக்கிய பாவை
கற்பவை கற்றபின்
Question 1.
பசிப்பிணி போக்கிய பாவை நாடகத்தை வகுப்பில் நடித்துக் காட்டுக.
Answer:
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தை வகுப்பில் மாணவர்கள் தாங்களாகவே அதில் வரும் கதாபாத்திரங்களில் வேடமிட்டு நடித்துக் காட்ட வேண்டும்.
Question 2.
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தைக் கதை வடிவில் சுருக்கி எழுதுக.
Answer:
பசிப்பிணி போக்கிய பாவை என்னும் நாடகத்தின் கதை வடிவம் :
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை, எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள், பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்கள் இடையே பொய்கைகள் என மனதை மயக்கும் காட்சிகள் கொண்ட மணிபல்லவத்தீவிற்குக் கொண்டுவந்து சேர்த்தது. அந்த மணிபல்லவத் தீவையும் அதிலுள்ள புத்தபீடிகையையும் காவல் செய்து வரும் தீவதிலகை மணிமேகலையைச் சந்திக்கிறாள். மேலும், அவள் மணிமேகலையிடம் ”பெருமை மிக்கவர்கள் மட்டுமே இத்தீவிற்கு வந்து இந்தப் புத்த பீடிகையை வணங்க முடியும். நீ அந்தப் பெருமையைப் பெற்றிருக்கிறாய். இன்னும் நீ அறிய வேண்டியது ஒன்று உண்டு என்று கூறினாள்.
மணிமேகலை “அஃது என்ன அம்மா?” என்று வினவினாள். இந்தத் தீவில் பூக்கள் நிறைந்து இருக்கும் பொய்கை ஒன்று உள்ளது. “இப்பொய்கை பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் கோமுகி என்று பெயர் பெற்றது. வைகாசித் திங்கள் முழுநிலவு நாளில் அப்பொய்கை நீரின் மேல் ஓர் அரிய பாத்திரம் தோன்றும். அஃது ஆபுத்திரன் கையிலிருந்த ‘அமுதசுரபி’ என்னும் பாத்திரம் ஆகும். அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம். அந்தப் பாத்திரம் தோன்றும் வைகாசி முழுநிலவு நாள் இன்றுதான்.” என்று தீவதிலகை மணிமேகலையிடம் கூறினாள்.
இவர்கள் உரையாடிக் கொண்டிருக்கும்போதே பொய்கையின் நீருக்கு மேல் அப்பாத்திரம் தோன்றியது. மணிமேகலை அதனை வணங்கிக் கையில் எடுத்தாள். தீவதிலகை, மணிமேகலையிடம் “மணிமேகலையே! உயிர்களின் பசிபோக்கும் அமுதசுரபியை நீ பெற்றுள்ளாய். இனி இவ்வுலக உயிர்களுக்குப் பசி இல்லாமல் போகும்படி உணவு வழங்கி உயர்வு பெறுவாயாக!” என்று கூறினாள்.
மணிமேகலை தீவதிலகையை வணங்கி அமுதசுரபியுடன் விடைபெற்று பூம்புகாருக்குத் திரும்பினாள். ஆதிரையிடம் உணவு பெறச் சென்றாள்.
ஆதிரையின் வீட்டு வாயிலில் அமுதசுரபியுடன் நின்றாள். ஆதிரை மணிமேகலையைப் பார்த்து “யார் நீங்கள்?” என்றாள். மணிமேகலை, “இவ்வூரில் வாழ்ந்த கோவலன், மாதவி ஆகியோரின் மகள் நான். உங்களின் சிறப்பை அறிந்து இப்பாத்திரத்தில் உணவு பெற வந்தேன்” என்று கூறினாள்.
ஆதிரை “ஓ! நீங்கள் தான் மணிமேகலையா? உங்கள் பெற்றோரைப் பற்றி அறிவேன். உங்களை இன்று தான் காண்கிறேன். இஃது என்ன பாத்திரம்? மிகவும் அழகாக இருக்கிறதே!” என்றாள். மணிமேகலை “இது அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கும் ‘அமுதசுரபி’” என்றும், தனக்கு இப்பாத்திரம் கிடைத்த வரலாற்றையும் கூறினாள்.
அமுதசுரபியின் சிறப்பை அறிந்த ஆதிரை “இதைக் கொண்டு என்னசெய்வீர்கள் என்று கேட்டாள். அதற்கு மணிமேகலை அன்பிற்குரிய ஆதிரையே, ஏழை மக்களின் பசியைப் போக்குவதே மேலான அறம். உணவு கொடுத்தவர்களே உயிரைக் கொடுத்தவர்கள் என்பதை உணர்ந்துள்ளேன். அதனால் இந்தப் பாத்திரத்தில் இருக்கும் உணவைப் பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் வழங்கப் போகின்றேன் என்று கூறினாள்.
அதனைக் கேட்ட ஆதிரை, “உங்கள் அறம் செழிக்கட்டும். மக்களின் பசிநோய் ஒழியட்டும். இதோ இப்போதே அமுதசுரபியில் நான் உணவை இடுகிறேன்” என்று கூறிவிட்டு உணவிட்டாள். மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவு அற்றோர் ஆகியோருக்கு உணவு அளித்தாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிட்டாள்.
மணிமேகலை உணவிட்டதும் அப்பாத்திரத்தில் இருந்த உணர்வு குறையவேயில்லை என்பதை மன்னரிடம் சிறைக்காவலர் தெரிவித்தனர். மன்னன் வியப்புடன் “அப்படியா? அப்பெண்ணை அழைத்து வா” என்று ஆணையிட்டார்.
மணிமேகலை மன்னரைச் சந்தித்தாள். அப்பாத்திரத்தைப் பற்றி மன்னர் வினவினார். மணிமேகலை அமுதசுரபி கிடைத்த வரலாற்றைக் கூறினாள். மன்னர், “மாதவம் செய்தவளே! இந்த உலக மக்களின் பசிப்பிணி தீர்க்கும் பாங்குடைய அறத்தைச் செய்கிறாய். நான் உனக்குச் செய்ய வேண்டிய உதவி ஏதேனும் இருக்கிறதா? என்று கேட்டார்.
மணிமேகலை “சிறையில் உள்ளவர்கள் திருந்தி வாழ வழி காண வேண்டும். சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டுவன, எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே என் வேண்டுகோள் மன்னா?” என்று கூறினாள். மன்னரும் உன் வேண்டுகோள் அனைத்தையும் நடைமுறைப்படுத்த ஆணையிடுகிறேன். நீ வாழ்க! உன் அறம் வளர்க! என்று கூறினார்.
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு ……………….
அ) இலங்கைத் தீவு
ஆ) இலட்சத் தீவு
இ) மணிபல்லவத் தீவு
ஈ) மாலத் தீவு
Answer:
இ) மணிபல்லவத் தீவு
Question 2.
மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் …………….
அ) சித்திரை
ஆ) ஆதிரை
இ) காயசண்டிகை
ஈ) தீவதிலகை
Answer:
ஆ) ஆதிரை
சொற்றொடரில் அமைத்து எழுதுக
அ) செடிகொடிகள் – செடிகொடிகள் வளர்ப்பதில் எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.
ஆ) முழுநிலவு நாள் – முழுநிலவு நாள் பௌர்ணமி என்று அழைக்கப்படும்.
இ) அமுதசுரபி – அமுதசுரபி அள்ள அள்ளக் குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
ஈ) நல்ல றம் – இல்லறம் சிறக்க ஒவ்வொருவரும் நல்லறச் செயல்களைச் செய்ய
குறுவினா
Question 1.
அமுதசுரபியின் சிறப்பு யாது?
Answer:
அமுதசுரபியில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனைப் பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
Question 2.
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது யாது?
Answer:
மணிமேகலை மன்னரிடம் வேண்டியது :
(i) சிறைச்சாலையில் தண்டனை பெற்றுள்ளவர்கள் திருந்தி வாழ வழிகாண வேண்டும்.
(ii) சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற வேண்டும்.
சிறுவினா
Question 1.
மணிபல்லவத்தீவு எவ்வாறு காட்சி அளித்தது?
Answer:
மணிபல்லவத்தீவில் எங்குப் பார்த்தாலும் வெண்மணல் குன்றுகள் இருந்தன. பூத்துக் குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த மரங்கள், இடையே பொய்கைகள் ஆகியன இருந்தன. மனதை மயக்கும் காட்சிகளைத் தந்தது.
Question 2.
“கோமுகி” என்பதன் பொருள் யாது?
Answer:
(i) மணிபல்லவத்தீவில் பூக்கள் நிறைந்து விளங்கும் பொய்கைக்குப் பெயர் கோமுகி.
(ii) ‘கோ’ என்றால் பசு. முகி’ என்றால் முகம்.
(iii) பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் அந்தப் பொய்கை கோமுகி எனப் பெயர் பெற்றது.
சிந்தனை வினா
Question 1.
அறச்செயல்கள் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள்?
Answer:
அறச்செயல்கள் :
(i) உயர்ந்த நற்குணங்களுடன் எல்லோரிடத்திலும் அன்புடன் பழகுதல்.
(ii) அனைத்து உயிர்களிடத்திலும் கருணையுடன் இருத்தல்.
(iii) நல்லவர்களிடம் கொள்ளும் நட்பு.
(iv) அறநூல்களில் கூறப்பட்ட ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல்.
(v) எளியோருக்கு ஈதல்.
(vi) எளியோரையும் நல்ல முறையில் உபசரித்தல்.
(vii) ஐம்புலன்களையும் அடக்கி நல்வழியில் செலுத்துதல்.
(vii) ஏழைகளுக்குத் தகுந்த உதவி செய்தல், உணவளித்தல், உவகையுடன் தானமளித்தல்.
(ix) பணிவுடன் நடந்து கொள்ளுதல்.
(x) எந்நிலையிலும் உண்மையைப் போற்றுதல்.
(xi) பசித்தோர்க்கு உணவளித்தல்.
(xii) தீய வழியில் செல்லாமல் இருத்தல்.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக :
1. “தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்.” என்று பாடியவர் ………………..
2. மணிமேகலை …………………. நகரைச் சேர்ந்த வள்.
3. மணிபல்லவத் தீவைப் பாதுகாப்பவள் …………..
4. பசுவின் முகம் போன்று அமைந்த பொய்கையின் பெயர் ………………..
5. கோமுகி நீரின் மேல் தோன்றும் அரிய பாத்திரத்தின் பெயர் ……………
6. அமுதசுரபி தோன்றும் நாள் ……………….. திங்கள் ………………… நாள்.
7. உயிர்களின் பசிபோக்கும் பாத்திரம் …………………
8. கோவலன், மாதவி ஆகியோரின் மகள் ………………………….
9. அமுதசுரபியில் முதலில் உணவை இட்டவள் …………….
10. வாழ்க்கைக்கு அறம் சொன்னவர் ………….
Answer:
1. பாரதியார்
2. பூம்புகார்
3. தீவதிலகை
4. கோமுகி
5. அமுதசுரபி
6. வைகாசித், முழுநிலவு
7. அமுதசுரபி
8. மணிமேகலை
9. ஆதிரை
10. வள்ளுவர்
விடையளி :
Question 1.
தீவதிலகை யார்?
Answer:
(i) தீவதிலகை மணிபல்லவத் தீவில் வாழ்பவள்.
(ii) அவள் அந்தத் தீவையும் அதிலுள்ள புத்த பீடிகையையும் காவல் செய்து வருபவள்.
Question 2.
அமுதசுரபி பற்றி எழுதுக.
Answer:
(i) அமுதசுரபி ஓர் அரிய பாத்திரம். இது கோமுகியின் மேல் வைகாசித் திங்கள் முழு – நிலவு நாளில் தோன்றும்.
(ii) அஃது ஆபுத்திரன் கையிலிருந்தது.
(iii) அந்தப் பாத்திரத்தில் இட்ட உணவு எடுக்க எடுக்கக் குறையாமல் வளர்ந்து கொண்டே இருக்கும். அதனைக் கொண்டு எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் உணவு அளிக்கலாம்.
(iv) இப்பாத்திரத்தைப் பெற்றவள் மணிமேகலை.
(v) இப்பாத்திரத்தில் முதலில் உணவிட்டவள் ஆதிரை.
Question 3.
ஆதிரையிடம் அமுதசுரபியைப் பற்றி மணிமேகலை கூறியது யாது?
Answer:
மணிமேகலை ஆதிரையிடம் இந்தப் பாத்திரம் அள்ள அள்ளக் குறையாமல் உணவு வழங்கும் அமுதசுரபி ஆகும் என்றும், இதனைக் கொண்டு பசியால் வாடும் மக்களுக்கு எல்லாம் உணவு வழங்கப் போகிறேன் என்றும் கூறினாள்.
Question 4.
மணிமேகலை எவருக்கெல்லாம் உணவிட்டாள்?
Answer:
மணிமேகலை அமுதசுரபியைக் கொண்டு, உடல் குறையுற்றோர், பிணியாளர், ஆதரவற்றோர் ஆகியோருக்கு உணவு அளித்தாள். பின்னர்ப் பூம்புகாரில் உள்ள
சிறைச்சாலைக்குச் சென்று அங்கு உள்ளவர்களுக்கும் உணவிட்டாள்.
Question 5.
மன்னரிடம் மணிமேகலை விடுத்த வேண்டுகோள் யாது?
Answer:
வாழ்க்கைக்கு அறம் சொன்ன வள்ளுவர் வாழ்ந்த நாடு இது. புத்தர் பிறந்து அறம் போதித்த பூமி இது. எவை நன்மைகள் எவை தீமைகள் என்பவற்றை எல்லாம் தக்க அறிஞர்களைக் கொண்டு சிறையில் உள்ளவர்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். மேலும் அவர்களுக்குப் பெற்றோரை மதித்தல், முதியோரைப் பேணல், உறவினர்களை அரவணைத்தல் போன்றவற்றை வலியுறுத்தும் அறநெறிக் கல்வியை அளிக்க வேண்டும். இதுவே மணிமேகலை மன்னரிடம் விடுத்த வேண்டுகோள் ஆகும்.
