Chapter 1.4 - Corpunka - Chapter 1.5 - எழுத்துகளின் பிறப்பு - Term 1 - 8th Tamil Guide Samacheer Kalvi Solutions
Updated On 26-08-2025 By Lithanya
You can Download the Chapter 1.4 - Corpunka - Chapter 1.5 - எழுத்துகளின் பிறப்பு - Term 1 - 8th Tamil Guide Samacheer Kalvi Solutions with expert answers for all chapters. Perfect for Tamil & English Medium students to revise the syllabus and score more marks in board exams. Download and share it with your friends
Share this to Friend on WhatsApp
Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.4 சொற்பூங்கா
Detailed Solutions Of Samacheer Kalvi 8th Tamil Guide Chapter 1.4 சொற்பூங்கா
Question 1.
ஓரெழுத்து ஒரு மொழிகள் இடம் பெறுமாறு ஐந்து தொடர்கள் எழுதுக.
Answer:
(i) பழங்காலத்தில் போர் தொடங்கும் முன் ஆநிரைகளைக் கவர்ந்து வருவர். (ஆ- பசு)
(ii) “கனமான பொருளைத் தூக்காதே, வை” என்று தாய் மகனிடம் கூறினார்.
(iii) கந்தனுக்கு முருகன் கை கொடுத்து உதவி செய்தான்.
(iv) தை மாதம் முதல் நாள் பொங்கல் திருநாளாகக் கொண்டாடப்படும்.
(v) “நீ எங்கே சென்றாய்?” என்று சீதா ராணியிடம் கேட்டாள்.
மதிப்பீடு
Question 1.
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கம் குறித்து இளங்குமரனார் கூறும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
தமிழ்மொழி பழங்காலம் தொட்டு இயங்கி வருதல் அதன் பெருஞ்சிறப்பு. தமிழ்மொழி செந்தமிழாகவும் செழுந்தமிழாகவும் உயிரோட்டத் தமிழாகவும் இருந்து வருகிறது. தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிகளின் பெருக்கத்தை இக்கட்டுரையில் காண்போம்.
தொல்காப்பியம் :
சொல் என்பதற்கு நெல் என்பது பொருள். நெல்லில் பதர் உண்டு. சொல்லில் பதர் இருந்தலாகாது. ‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்பது தொல்காப்பியர்மொழி. மொழி என்பதற்குச் சொல் என்பதும் ஒரு பொருள். மொழியானது ஓர் எழுத்துமொழி, ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட எழுத்துகள் உடைய மொழி என மூவகைப்படும். ‘நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒருமொழி’ என்றும் ‘குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைபு இலவே’ என்றும் தொல்காப்பியர் கூறுகிறார்.
ஓரெழுத்து ஒரு மொழிகள் :
உயிர் வரிசையில் ஆறு எழுத்துகளும், ம வரிசையில் ஆறு எழுத்துகளும், த, ப, நம் என்னும் வரிசைகளில் ஐந்து ஐந்து எழுத்துகளும், க, ச, வ என்னும் வரிசைகளில் நான்கு நான்கு எழுத்துகளும், ய வரிசையில் ஒன்றும் ஆக நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்றார் நன்னூலார். நொ, து என்னும் குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார்.
‘பூ’ மற்றும் ‘யா’ :
‘பூ’ என்பதும் ‘கா’ என்பதும் ஓரெழுத்து ஒரு மொழி. இவை இரண்டையும் இணைத்துப் பூங்கா எனக் கலைச்சொல் உருவாயிற்று. ‘யா’ என்பது வினா. யாது, யாவர், யாவன், யாவள், யாங்கு, யாண்டு, யார், யாவை என்றெல்லாம் வினாவுவதற்கு முன் ‘யா’ என்ற எழுத்து முதலில் நிற்கிறது.
‘ஆ’ மற்றும் ‘மா’ :
ஆ, மா, நீ, மீ, பீ, ஊ, சே, தே இவை ஓரெழுத்து ஒரு மொழிகள். ஆ, மா என்பவை இணைந்து ஆமா எனக் கலைச்சொல் வடிவம் பெற்றுள்ளது. காட்டுப் பசுவுக்கு ‘ஆமா’ என்று பெயர். மா என்பது மாநாடு, மாநிலம், மாஞாலம் என்ற சொற்களில் பெரிய’ என்னும் பொருளில் அமைந்துள்ளது. ‘மா’ என்னும் ஓரெழுத்து ஒரு மொழி இயல்பு வழக்கிலும் இலக்கிய வழக்கிலும் திகழ்கின்றது. மாந்தளிர் நிறத்தை மாநிறம் என்றனர். அரிமா, பரிமா, நரிமா, வரிமா, கரிமா என்று வந்து விலங்கினப் பெயராகிறது.
பிற எழுத்துகள் :
ஈ என்னும் எழுத்து ஒலிக்குறிப்பைக் காட்டுகிறது. மாட்டு ஈ, தேன் ஈ எனப் பகுத்தும் வழங்கப்படும். ஈ என்பது ஈக என்னும் பொருளில் வழங்குதல் வெளிப்படை ஆகும். ஈ என்று பல்லைக் காட்டாதே என்று அறிவுரை கூறவும் பயன்படும். போ, வா, நீ, சூ, சே, சை, சோ என்பவை இன்று அனைவராலும் வழங்கப்படுகின்றன. நன்னூலார் கூறிய ஓரெழுத்து ஒரு மொழிகளில் சில இன்று வழக்கில் இல்லை. இன்று வழக்கில் உள்ளவை நன்னூலார் கூறிய பட்டியலில் இல்லை என்று தெளியலாம்.
மாற்றம் பெற்றவை :
ஆன் என்பது ஆ என்றும், மான் என்பது மா என்றும் கோன் என்பது கோ என்றும், தேன் என்பது தே என்றும், பேய் என்பது பே என்றும் மாறி காலவெள்ளத்தில் கரைந்தன. எட்டத்தில் போகிறவனை ஏய் என்றனர். ஏய் என்பது என்னோடு கூடு, பொருந்து, சேர் என்னும் பொருளை உடையது. ஏவுதல் என்பது அம்புவிடுதல், ஏவும் அம்பு ‘ஏ’ என்றாகியது. அம்பு போல விரைந்து கடமை செய்பவன் ஏவலன் எனப்பட்டான். அம்பு விடும் கலை ஏகலை, அதில் வல்லவன் ஏகலைவன் எனப் பாராட்டப்பட்டான்.
ஏவு – ஏ – எய் என ஆயிற்று, ஏவுகின்ற அம்பைப் போல் கூர்முள்ளை உடைய முள்ளம் பன்றியின் பழம்பெயர் எய்ப்பன்றி, அம்பை எய்பவர் எயினர். அவர்தம் மகளிர் எயினியர். சங்கப் புலவர்களுள் எயினனாரும் உளர். எயினியாரும் உளர்.
முடிவுரை :
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின் பெருக்கம் நம் மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு என்பவனவற்றைக் கையில் கனியாகக் காட்டும். இத்தகைய தமிழ்மொழியின் சொற்களை, மொழிப்பற்றை மீட்டெடுத்தலே வழிகாட்டிகளுக்கு முதல் கடமையாய் நிற்கிறது. மொழிப்பற்றுள்ள ஒருவனே மொழியை வளர்ப்பான்; அதன் இனத்தை, பண்பாட்டைக் காப்பான்.
